Tuesday, June 18, 2013

பழனிபாரதியான பாலுமகேந்திரா !

கடந்த 16ம் தேதி இரவு தந்தி டி.வியில் சினிமா குறித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நங்கை இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தை தெரிவித்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசிய காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் முன் விரிந்த எழுத்து பட்டையில் “பழனிபாரதி, பாடலாசிரியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு முறை அதே எழுத்து பட்டை திரையில் ஒளிர்ந்து மறைந்தது. பாலுமகேந்திராவிற்கும் பழனிபாரதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்து கொள்வது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையெல்லாம் பார்த்து தொலைய வேண்டிய நேயர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

ஆத்மா சாந்தியடையட்டும் !


சில விஷயங்களை நம்ப முடிவதில்லை. அப்படித்தான் கடந்த 15ம் தேதி இயக்குனர் மணிவண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சியில் வெளியான போது நம்ப முடியாமல் ஒன்றுக்கு பல முறை மீண்டும் மீண்டும் அதை தொலைக்காட்சியில் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருந்தது. 59 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த அவர் தனது 50வது படத்துடன் பிரியாவிடை பெற்று சென்றுவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் தனது 50வது திரைப்படம் குறித்து வாரப்பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ’ரிட்டையர் ஆகும் போது பாராட்டாதீங்க’ என வலியுடன் குறிப்பிட்டிருந்தார். (அது குறித்த இடுகை ஒன்றும் வெளியிடப்படிருந்தது) பொதுவாக படைப்பாளிகளுக்கு அவர்களது மூச்சு நிற்கும் வரை ரிட்டையர்மெண்ட் என்பது  கிடையாது.

ஒருவேளை தனது ரிட்டையர்மெண்ட் குறித்து முன்கூட்டியே உணர்ந்து தான் அந்த பேட்டியில் அப்படி சொன்னாரோ என்னவோ?. எது எப்படியோ, இயக்குனர் மணிவண்ணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரும் இழப்புதான் !.  அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.!

Wednesday, May 8, 2013

எல்லாமே லேட்டஸ்ட்!


தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வரும் முதியவருக்கு அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அழைத்த குரல், தான் ஒரு தனியார் செல்போன் நிறுவன அலுவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் தங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க இடம் தந்தால் வாடகையாக மாதம் ரூ.8 ஆயிரம் தருவதாக கூறியது. அடுத்த நாள் மிடுக்காக ஒரு நபர் பைக்கில் வந்து இறங்கினார். அந்த முதியவரை அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு அருகிலேயே உள்ள அவரது  விவசாய நிலத்தில் உள்ள காலியிடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த இடத்தில் செல்போன் சிக்னல் நன்றாக கிடக்கிறதா என பார்ப்பதற்காக ஒரு குழி தோண்டி தான் அணிந்திருந்த செயின், மோதிரம் ஆகியவற்றை அதில் போட்டு மூடிவிட்டு தன் செல்போனை எடுத்து சிக்னல் போதுமான அளவிற்கு கிடைக்கிறதா என பார்த்துள்ளார்.

தொடர்ந்து அங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என கூறிய அந்த நபர், நில உரிமையாளரிடம் இன்னும் கொஞ்சம் நகை இருந்தால் கொடுங்கள் சிக்னல் சரியாக கிடைக்கிறதா என சோதித்து பார்க்கலாம் என கேட்டுள்ளார். உடனடியாக அவரும்  தான் அணிந்திருந்த மோதிரம் மட்டுமில்லாமல் வீட்டிலிருந்த 7 பவுன் செயின் ஒன்றையும் எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதையும் குழியில் போட்டு மூடி சோதனை செய்த அந்த நபர் இங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் வேறு இடத்தில் சோதனை செய்து பார்க்கலாம் எனக் கூறி அவரது நிலத்திலேயே சற்று தள்ளி வேறு ஒரு இடத்தில், நில உரிமையாளரையே குழி பறிக்க கூறியுள்ளார். அந்த முதியவரும் அங்கு குழி தோண்டியுள்ளார். அவர் கொஞ்சம் குழி தோண்டிய நிலையில் போன் பேசியபடியே  அவரருகில் வந்த அந்த நபர், முதியவரிடம் தன்னுடைய உயரதிகாரி வந்திருப்பதாகவும், வழி தெரியாமல் மெயின் ரோட்டில் நிற்கும் அவரை தான் சென்று அழைத்து வருவகிறேன் நீங்கள் குழி தோண்டி கொண்டிருங்கள் என கூறி சென்றுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சென்றவர் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ஏற்கனவே மூடிய குழிக்குள் இருக்கும் நகையை எடுக்க நினைத்து அந்த குழியை தோண்டி பார்த்தார். ஆனால் அதற்குள் எந்த நகையும் இல்லை. அப்போது தான் அவர், தான் சற்று தள்ளி புதிதாக குழி தோண்டிக் கொண்டிருந்தபோது அந்த நபர் குழிக்குள் போட்டு மூடப்பட்டிருந்த நகைகளை சுருட்டிக் கொண்டு சென்றதை உணர்ந்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்து என்ன செய்வது? நகையுடன் சிட்டாய் பறந்தவன் எங்கிருக்கிறானோ? 8 பவுன் நகையை பறிகொடுத்த அந்த முதியவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் என்பதை இங்கு சொல்லாமல் விட்டால் இந்த இடுகை நிறைவடையாது!.

Tuesday, January 22, 2013

ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க!


ஒரு படைப்பாளி வாரப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் முடிவில் கூறியிருந்த வலி நிறைந்த வார்த்தைகள் தான் இந்த இடுகைக்கான துவக்கம்.  அந்த படைப்பாளி, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை, இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி என வெரைட்டியான வெற்றிகளை தந்தவர். சுமார் 36 படங்களை இயக்கிவிட்டு தற்போது மீண்டும் அடுத்த படத்தை துவக்கியுள்ளார்.

அதையொட்டி  இவர் சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் கடைசியில், ‘ஒரு கலைஞனை சாந்தமான மனநிலையில் செயல்பட விட்டாலே போதும். அருமையா படம் பண்ற நேரத்துல எல்லாம் விமர்சனம்னு தொந்தரவு பண்ணிட்டு, ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க. அது தான் முக்கியம்’ என முடித்திருந்தார். ஒரு கலைஞனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவை.

கலைஞனின் மனது எப்போதும் ஏங்குவது கைதட்டலுக்கு மட்டும் தான் என்பது இவரது வார்த்தைகள் மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டுமே நினைக்காமல் கடந்த காலங்களையும் கொஞ்சம் நினைத்தால் என்ன ?

Wednesday, November 28, 2012

சிந்திக்காத கோணம்!


 
சமீபத்தில் அறிமுகமான நண்பர் அவர். ’வாங்க ஒரு டீ சாப்பிடுவோம்’ என்றார். டீ முடிந்தவுடன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தார். புன் முறுவலுடன் பார்த்தேன். புரிந்து கொண்டவராக சிரித்தார். ’பீடி குடிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க சார். அதுக்கு பதிலா பஞ்சு வெச்ச சிகரெட் குடிக்கலாமில்ல’ என்றேன்.

அதற்கு, ‘இப்படித்தான் தலைவா நாட்டுல கொள்ளபேரு புரளிய கிளப்பி விட்டுருக்கானுங்க. பொதுவா இந்த பீடியோட சைஸ் பாத்தீங்கன்னா ஈர்க்குச்சி மாதிரி சின்னதா இருக்கும். இதுலயும் பாதி பீடி சுருட்டுன இலைதான். மீதி இருக்கிற அந்த தலைப்பகுதிலதான் கொஞ்சம் தூள் இருக்கும். ஆனா நீங்க சொல்ற அந்த பஞ்சு வெச்ச சிகரெட்ல பாத்தீங்கண்ணா அடீல இருந்து நுனி வரைக்கும் தூளா இருக்கும். இது பத்து பீடிக்கு சமம். இப்ப சொல்லுங்க எது கெடுதல் ஜாஸ்தின்னு’ என்றார், சிந்தனையுடன் திரும்பினேன்.

Monday, January 9, 2012

தொடர் எழுதித் தொடர உத்தேசம்!

சமீபகாலமாக வலைப்பூவின் பக்கம் எட்டியே பார்க்காத நிலையில் தொடர் எழுதியாவது வலைப்பூவைத் தொடரலாம் என ஒரு விபரீத எண்ணம்(!) எழுந்துள்ளது.

‘உறவுகள்’ எனும் தலைப்பில் எழுத உத்தேசம். எப்போதும் விடை காண முடியாத ஆச்சரியங்களையும், சிக்கல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள உறவுகள் குறித்து காலவரிசைக் கிரமமின்றி நான், என் நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர், அறியாதவர் என கண்டு, கேட்டு, உணர்ந்த உறவுமுறைகள் பற்றி வாரா வாரம் எழுத உத்தேசித்துள்ளேன். (இது வெறும் அறிமுக வாரம் தான்!) வழக்கம் போல் பெயர்கள், இடங்கள் மாற்றப்பட்டே வெளியிடப்படும்.

இந்த வலைப்பூ பக்க(மு)ம் எட்டிப் பார்க்கும் பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவதுடன் வாக்களித்துச் செல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தொடரிகளானால் ( அதாங்க! FOLLOWERS) இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்வேன்!

சென்னை(யில்) தமிழ்!

சுமார் 3 வருடங்களுக்குப் பின் பணி நிமித்தமாக சமீபத்தில் சென்னை விஜயம். அதிகாலை சென்ட்ரலில் இருந்து பெசன்ட் நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ‘துவல் நிலையம்’ என்று ஒரு பெயர்ப் பலகையில் பார்வை நிலைகுத்தியது. பேருந்து ஓட்டத்தில் பார்வையில் இருந்து மறையப் பார்த்த அந்த பெயர்ப் பலகையை மீண்டும் திரும்பிப் பார்த்த போது ‘துவல் நிலையம்’ என்ற அந்த வார்த்தைக்குக் கீழ் ‘PEN CENTER’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த தமிழ் வார்த்தை நினைவில் பதிந்துவிட அன்றைய தினம் பேருந்தில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் பெயர்ப் பலகைகளை கவனிக்க ஆரம்பித்ததில் ‘வாடகை ஊர்தியகம்’, ‘காலை உணவகம்’, ‘அலுவலர்கள் வெளுப்பகம்’, ‘இரும்பகம்’, ‘குளிர்பானம் மற்றும் செய்தித்தாள் விற்பனையகம்’ எனத் தமிழில் எழுதப்பட்டிருந்த பல்வேறு பெயர்ப் பலகைகளை காண முடிந்தது.

எங்கள் ஊரைப் போன்ற சிறிய நகரங்களில் கூட தமிழில் பெயர்ப் பலகைகளை காண்பது அரிதாக உள்ள நிலையில் தலைநகராம் சென்னையில் அதிக அளவில்-சுமார் 90 சதவீதம் பெயர்ப் பலகைகளை தமிழில் பார்த்தது சற்றே வியப்புதான்!.

இனியும் ‘சென்னைத் தமிழ்’ என கேலி பேசும் நண்பர்கள் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம்!