Tuesday, January 13, 2015

"கடமை வீரன்"

பணி முடிந்து இரவு 12 மணிக்கு வீட்டிற்குச் செல்ல கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு பேருந்தில் புறப்பட்டேன். நள்ளிரவு நேரம், பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே,  ஓட்டுநர் பேருந்தை ரசித்து ஓட்டினார். அதனால், அவிநாசியை சுமார் 1 மணியளவில் கடக்க வேண்டிய பேருந்து 1.25 மணிக்கே கடந்து சென்றது.
ஒருவழியாக பெருமாநல்லூரைக் கடந்து செங்கப்பள்ளிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் உள்பகுதியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து விட்டன.
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு விளக்குகளை எரியவைக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஆனால்  முடியவில்லை.  உடனே நடத்துநரிடம், 'ஏம்பா, செங்கப்பள்ளில பின்னாடி வர்ற வண்டிக்கு மாத்திவுட்டுருவமா?' என்றார். நடத்துனரோ, 'மாத்தறதுனாலும், மாத்தலாம். இல்ல அப்டியே போறதுன்னாலும் போலாம். எறங்கறது ஒன்னும் இல்ல. எல்லாமே ஈரோடு சீட்தான்' என்றார். 'இல்ல அது சரிவராது' என்றபடியே பேருந்தை செங்கப்பள்ளியைத் தாண்டி ஓட்டிச் செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
செங்கப்பள்ளி வந்தவுடன், 'ஹெட் லைட்தான் எரியுதில்ல, அப்டியே போயிரலாமா?' என்ற நடத்துநரின் யோசனையைப் புறந்தள்ளிவிட்டு பேருந்தை நிறுத்தியவுடன் பேக்கரிக்குள் புகுந்துவிட்டார்.
நடத்துநரும் அவருக்குத் துணையாகச் செல்ல பேருந்தில் இருந்த பயணிகளும், 'இந்த பஸ்சுல போறதுக்கு, பின்னாடி வர்ற வண்டில போனாக்கூட சீக்கிரம் போயிரலாம் போல இருக்குது' என்ற  முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
எங்கள் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தங்களது "கடமையை" முடித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வருதற்கும், கோவையில் இருந்து எங்கள் பேருந்துக்கு பின்னால் அரை மணிநேரம்  கழித்து புறப்பட்ட பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
நடத்துநரின் உத்தரவுக்கு காத்திராமல் அனைவரும் அந்தப் பேருந்துக்குத் தாவி, தப்பித்து வந்தோம்.
உள்பக்க விளக்குகள் எரியாததற்காக இயக்காமல் நிறுத்தப்பட்ட பேருந்தை காலையில் வெளிச்சம் வந்த பிறகுதான் ஓட்டிச் சென்று சேர்த்தார்களோ என்னவோ?
இந்த வழித்தடத்தில் இதுபோன்ற "கடமை வீரர்கள்" இன்னும் சிலர் இருக்கிறார்கள். உங்களுக்கும் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அனைவருக்கும் ஒரு பாராட்டு விழா நடத்திவிடலாம்!

No comments:

Post a Comment