Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Saturday, April 4, 2015

கூச்சம் ஏன்?

எங்கள் அலுவலகத்தின் அருகே உள்ள நான்கு சாலைச் சந்திப்பு பகுதியில் ஒரு சைவ உணவகம் உள்ளது. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் சுவை, சுகாதாரம், தரம்  ஆகியவற்றை ஒப்பிடுகையில் அது பெரிதாகத் தெரிவதில்லை. எப்போதாவது இரவு அங்கு சாப்பிடச் செல்வோம்.
கடையினுள் நுழையும் போது, காசாளர் இருக்கையைத் தாண்டியவுடன் ஒரு பெரியவர், நெற்றியில் சந்தனப் பொட்டு, குங்குமத்துடன் நின்று கொண்டு வருபவர்களை இருகரம் கூப்பி, வாய்நிறையச் சிரிப்புடன், வாங்க ! வாங்க ! என வரவேற்பார்.
பின்னர் அவரே, வருபவர்களை காலியாக  உள்ள இருக்கைகளுக்கு அழைத்துச் சென்று அமர வைப்பார்.
ஆனால், உணவகத்திற்கு வரும் பெரும்பாலானோர் அவர் இருகரம் கூப்பி வரவேற்கும் போது, சற்றுக் கூச்சத்துடனேயே, தங்கள் கையை பாதி கூப்பியும், கூப்பாமலும்,  தலையை மட்டும் அசைத்தும், ஒரு புன்முறுவல் கூட செய்யாமலும் செல்வர்.
நமது பாரம்பரிய வழக்கப்படி கைப்பி முகமன் கூற கூச்சம் ஏன்?

Tuesday, January 13, 2015

"கடமை வீரன்"

பணி முடிந்து இரவு 12 மணிக்கு வீட்டிற்குச் செல்ல கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு பேருந்தில் புறப்பட்டேன். நள்ளிரவு நேரம், பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே,  ஓட்டுநர் பேருந்தை ரசித்து ஓட்டினார். அதனால், அவிநாசியை சுமார் 1 மணியளவில் கடக்க வேண்டிய பேருந்து 1.25 மணிக்கே கடந்து சென்றது.
ஒருவழியாக பெருமாநல்லூரைக் கடந்து செங்கப்பள்ளிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் உள்பகுதியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து விட்டன.
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு விளக்குகளை எரியவைக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஆனால்  முடியவில்லை.  உடனே நடத்துநரிடம், 'ஏம்பா, செங்கப்பள்ளில பின்னாடி வர்ற வண்டிக்கு மாத்திவுட்டுருவமா?' என்றார். நடத்துனரோ, 'மாத்தறதுனாலும், மாத்தலாம். இல்ல அப்டியே போறதுன்னாலும் போலாம். எறங்கறது ஒன்னும் இல்ல. எல்லாமே ஈரோடு சீட்தான்' என்றார். 'இல்ல அது சரிவராது' என்றபடியே பேருந்தை செங்கப்பள்ளியைத் தாண்டி ஓட்டிச் செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
செங்கப்பள்ளி வந்தவுடன், 'ஹெட் லைட்தான் எரியுதில்ல, அப்டியே போயிரலாமா?' என்ற நடத்துநரின் யோசனையைப் புறந்தள்ளிவிட்டு பேருந்தை நிறுத்தியவுடன் பேக்கரிக்குள் புகுந்துவிட்டார்.
நடத்துநரும் அவருக்குத் துணையாகச் செல்ல பேருந்தில் இருந்த பயணிகளும், 'இந்த பஸ்சுல போறதுக்கு, பின்னாடி வர்ற வண்டில போனாக்கூட சீக்கிரம் போயிரலாம் போல இருக்குது' என்ற  முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
எங்கள் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தங்களது "கடமையை" முடித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வருதற்கும், கோவையில் இருந்து எங்கள் பேருந்துக்கு பின்னால் அரை மணிநேரம்  கழித்து புறப்பட்ட பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
நடத்துநரின் உத்தரவுக்கு காத்திராமல் அனைவரும் அந்தப் பேருந்துக்குத் தாவி, தப்பித்து வந்தோம்.
உள்பக்க விளக்குகள் எரியாததற்காக இயக்காமல் நிறுத்தப்பட்ட பேருந்தை காலையில் வெளிச்சம் வந்த பிறகுதான் ஓட்டிச் சென்று சேர்த்தார்களோ என்னவோ?
இந்த வழித்தடத்தில் இதுபோன்ற "கடமை வீரர்கள்" இன்னும் சிலர் இருக்கிறார்கள். உங்களுக்கும் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அனைவருக்கும் ஒரு பாராட்டு விழா நடத்திவிடலாம்!

Monday, September 22, 2014

'ஐ' யகோ !

சமீபத்தில் நடைபெற்ற  ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஒரு சினிமாவை திட்டமிட்டு உருவாக்குபவர்களுக்கு இதுபோன்ற விழாவை சரியாக நடத்த முடியாமல் போனது சற்று ஆச்சரியம்தான்.
சமீபமாக இதுபோன்ற பாடல் வெளியீட்டு விழா என்றில்லாமல் பொதுவாக சினிமா விழா என்றாலே அதில் திரைக்கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்தி விடுகிறார்கள்.
விழாவில், திரைக்குப் பின்னால் உழைத்த கலைஞர்களை மேடையிலோ அல்லது மேடைக்கு முன்பாகவோ அமரவைத்து, அவர்களது திறமையை, உழைப்பை பாராட்டி பேசுவதைவிட வேறெதுவும் இதுபோன்ற விழாக்களில் சிறப்பாக இருக்காது.
இதுபோன்ற ஆடல், பாடல் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தான். அது அவர்களுக்கு உபயோகமாக இருந்தது.
திரைத்துறையினர் இதுபோன்ற விழாக்களுக்கு செலவிடும் தொகையை அந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம். ஐ படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் அங்கு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிதான் என்பதில் துளியும் ஐயமில்லை.
சினிமாவில் ஆடி, பாடி நடிப்பவர்களை சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆடி, பாடச் சொல்ல வேண்டுமா? 

Saturday, December 21, 2013

குத்து வாங்கிய புலி!

கடந்த இருவாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை, சேனலில் மேய்ந்துகொண்டிருந்தபோது U TV Action-ல் 'ஹிம்மத்வாலா' என்ற பெயர் தென்பட்டது. அட அதற்குள் TV-க்கு வந்துவிட்டதா? என ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். ஏனெனில் இந்த படத்தைப்பற்றி வெள்ளிக்கிழமை சினிமா மலர்களில் பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்கள். அவை எல்லாவற்றையும்விட இதில் தமனா நடித்திருப்பது தான் எதிர்பார்ப்புகளின் எகிறலுக்கு காரணம்.
நான் பார்த்தபோது தமனா, பார்பி டால் ரேஞ்சில் குட்டைப்பாவாடையுடன், கண்களில் மரண பயத்துடன் நின்றுகொண்டிருந்தார். காற்று லேசாக வீசியதில் அவரது குட்டைப்பாவாடை வேறு லேசாக மேலே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.
அப்போது, அவர் முன் ஒரு புலி உறுமியபடி நின்று கொண்டிருந்தது. அந்தப்புலி தமனா மீது பாய முற்படும்போது அஜய்தேவ்கன் (ஹீரோ!) என்ட்ரியாகிறார்.
அதன்பின் அஜய்தேவ்கனுக்கும் புலிக்கும் இடையே கடும் மோதல் நடக்கிறது. இருவரும் கட்டிப்புரண்டு, குடிசையின் கூரையையெல்லாம் பிய்த்துக்கொண்டு சண்டையிடுகின்றனர். அப்போது புலி அஜய் தேவ்கனின் கழுத்தில்  அறைந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது.
இதனால் ஆக்ரோஷமடைந்த அஜய்தேவ்கன் பாய்ந்து வந்த புலியின் தாடையில் ஓங்கி ஒரு குத்துவிடுகிறார். அதில் புலி உருண்டோடி விழுந்து பின் எழுந்து சென்று சற்றுத் தள்ளி அமைதியாகப் படுத்துவிட்டது. அதன்பின் சாவகாசமாக அஜய்தேவகன் அதன் அருகில் சென்று அமர்ந்து கேஷுவலாகப் பேசுகிறார். என்ன பேசினாரோ தெரியவில்லை (நமக்கு ஹிந்தி தெரிஞ்சாத்தானே!)அந்தப் புலி அமைதியாக எழுந்து வாலைச் சுழற்றியபடி சென்றுவிட்டது.
இதற்குமேல் நான் அந்தப் படத்தைப் பற்றி விவரித்து உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னவென்றால், நீங்கள் எப்போதெல்லாம் மூட்-அவுட்டாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்தப் படத்தை பாருங்கள், உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுவீர்கள்!  இப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாளுக்கு இருமுறை வீதம் ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான்பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

Saturday, November 2, 2013

வாழ்த்து!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Tuesday, June 18, 2013

பழனிபாரதியான பாலுமகேந்திரா !

கடந்த 16ம் தேதி இரவு தந்தி டி.வியில் சினிமா குறித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நங்கை இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தை தெரிவித்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசிய காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் முன் விரிந்த எழுத்து பட்டையில் “பழனிபாரதி, பாடலாசிரியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு முறை அதே எழுத்து பட்டை திரையில் ஒளிர்ந்து மறைந்தது. பாலுமகேந்திராவிற்கும் பழனிபாரதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்து கொள்வது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையெல்லாம் பார்த்து தொலைய வேண்டிய நேயர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

ஆத்மா சாந்தியடையட்டும் !


சில விஷயங்களை நம்ப முடிவதில்லை. அப்படித்தான் கடந்த 15ம் தேதி இயக்குனர் மணிவண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சியில் வெளியான போது நம்ப முடியாமல் ஒன்றுக்கு பல முறை மீண்டும் மீண்டும் அதை தொலைக்காட்சியில் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருந்தது. 59 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த அவர் தனது 50வது படத்துடன் பிரியாவிடை பெற்று சென்றுவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் தனது 50வது திரைப்படம் குறித்து வாரப்பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ’ரிட்டையர் ஆகும் போது பாராட்டாதீங்க’ என வலியுடன் குறிப்பிட்டிருந்தார். (அது குறித்த இடுகை ஒன்றும் வெளியிடப்படிருந்தது) பொதுவாக படைப்பாளிகளுக்கு அவர்களது மூச்சு நிற்கும் வரை ரிட்டையர்மெண்ட் என்பது  கிடையாது.

ஒருவேளை தனது ரிட்டையர்மெண்ட் குறித்து முன்கூட்டியே உணர்ந்து தான் அந்த பேட்டியில் அப்படி சொன்னாரோ என்னவோ?. எது எப்படியோ, இயக்குனர் மணிவண்ணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரும் இழப்புதான் !.  அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.!

Wednesday, May 8, 2013

எல்லாமே லேட்டஸ்ட்!


தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வரும் முதியவருக்கு அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அழைத்த குரல், தான் ஒரு தனியார் செல்போன் நிறுவன அலுவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் தங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க இடம் தந்தால் வாடகையாக மாதம் ரூ.8 ஆயிரம் தருவதாக கூறியது. அடுத்த நாள் மிடுக்காக ஒரு நபர் பைக்கில் வந்து இறங்கினார். அந்த முதியவரை அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு அருகிலேயே உள்ள அவரது  விவசாய நிலத்தில் உள்ள காலியிடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த இடத்தில் செல்போன் சிக்னல் நன்றாக கிடக்கிறதா என பார்ப்பதற்காக ஒரு குழி தோண்டி தான் அணிந்திருந்த செயின், மோதிரம் ஆகியவற்றை அதில் போட்டு மூடிவிட்டு தன் செல்போனை எடுத்து சிக்னல் போதுமான அளவிற்கு கிடைக்கிறதா என பார்த்துள்ளார்.

தொடர்ந்து அங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என கூறிய அந்த நபர், நில உரிமையாளரிடம் இன்னும் கொஞ்சம் நகை இருந்தால் கொடுங்கள் சிக்னல் சரியாக கிடைக்கிறதா என சோதித்து பார்க்கலாம் என கேட்டுள்ளார். உடனடியாக அவரும்  தான் அணிந்திருந்த மோதிரம் மட்டுமில்லாமல் வீட்டிலிருந்த 7 பவுன் செயின் ஒன்றையும் எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதையும் குழியில் போட்டு மூடி சோதனை செய்த அந்த நபர் இங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் வேறு இடத்தில் சோதனை செய்து பார்க்கலாம் எனக் கூறி அவரது நிலத்திலேயே சற்று தள்ளி வேறு ஒரு இடத்தில், நில உரிமையாளரையே குழி பறிக்க கூறியுள்ளார். அந்த முதியவரும் அங்கு குழி தோண்டியுள்ளார். அவர் கொஞ்சம் குழி தோண்டிய நிலையில் போன் பேசியபடியே  அவரருகில் வந்த அந்த நபர், முதியவரிடம் தன்னுடைய உயரதிகாரி வந்திருப்பதாகவும், வழி தெரியாமல் மெயின் ரோட்டில் நிற்கும் அவரை தான் சென்று அழைத்து வருவகிறேன் நீங்கள் குழி தோண்டி கொண்டிருங்கள் என கூறி சென்றுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சென்றவர் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ஏற்கனவே மூடிய குழிக்குள் இருக்கும் நகையை எடுக்க நினைத்து அந்த குழியை தோண்டி பார்த்தார். ஆனால் அதற்குள் எந்த நகையும் இல்லை. அப்போது தான் அவர், தான் சற்று தள்ளி புதிதாக குழி தோண்டிக் கொண்டிருந்தபோது அந்த நபர் குழிக்குள் போட்டு மூடப்பட்டிருந்த நகைகளை சுருட்டிக் கொண்டு சென்றதை உணர்ந்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்து என்ன செய்வது? நகையுடன் சிட்டாய் பறந்தவன் எங்கிருக்கிறானோ? 8 பவுன் நகையை பறிகொடுத்த அந்த முதியவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் என்பதை இங்கு சொல்லாமல் விட்டால் இந்த இடுகை நிறைவடையாது!.

Tuesday, January 22, 2013

ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க!


ஒரு படைப்பாளி வாரப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் முடிவில் கூறியிருந்த வலி நிறைந்த வார்த்தைகள் தான் இந்த இடுகைக்கான துவக்கம்.  அந்த படைப்பாளி, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை, இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி என வெரைட்டியான வெற்றிகளை தந்தவர். சுமார் 36 படங்களை இயக்கிவிட்டு தற்போது மீண்டும் அடுத்த படத்தை துவக்கியுள்ளார்.

அதையொட்டி  இவர் சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் கடைசியில், ‘ஒரு கலைஞனை சாந்தமான மனநிலையில் செயல்பட விட்டாலே போதும். அருமையா படம் பண்ற நேரத்துல எல்லாம் விமர்சனம்னு தொந்தரவு பண்ணிட்டு, ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க. அது தான் முக்கியம்’ என முடித்திருந்தார். ஒரு கலைஞனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவை.

கலைஞனின் மனது எப்போதும் ஏங்குவது கைதட்டலுக்கு மட்டும் தான் என்பது இவரது வார்த்தைகள் மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டுமே நினைக்காமல் கடந்த காலங்களையும் கொஞ்சம் நினைத்தால் என்ன ?

Wednesday, November 28, 2012

சிந்திக்காத கோணம்!


 
சமீபத்தில் அறிமுகமான நண்பர் அவர். ’வாங்க ஒரு டீ சாப்பிடுவோம்’ என்றார். டீ முடிந்தவுடன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தார். புன் முறுவலுடன் பார்த்தேன். புரிந்து கொண்டவராக சிரித்தார். ’பீடி குடிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க சார். அதுக்கு பதிலா பஞ்சு வெச்ச சிகரெட் குடிக்கலாமில்ல’ என்றேன்.

அதற்கு, ‘இப்படித்தான் தலைவா நாட்டுல கொள்ளபேரு புரளிய கிளப்பி விட்டுருக்கானுங்க. பொதுவா இந்த பீடியோட சைஸ் பாத்தீங்கன்னா ஈர்க்குச்சி மாதிரி சின்னதா இருக்கும். இதுலயும் பாதி பீடி சுருட்டுன இலைதான். மீதி இருக்கிற அந்த தலைப்பகுதிலதான் கொஞ்சம் தூள் இருக்கும். ஆனா நீங்க சொல்ற அந்த பஞ்சு வெச்ச சிகரெட்ல பாத்தீங்கண்ணா அடீல இருந்து நுனி வரைக்கும் தூளா இருக்கும். இது பத்து பீடிக்கு சமம். இப்ப சொல்லுங்க எது கெடுதல் ஜாஸ்தின்னு’ என்றார், சிந்தனையுடன் திரும்பினேன்.

Monday, January 9, 2012

சென்னை(யில்) தமிழ்!

சுமார் 3 வருடங்களுக்குப் பின் பணி நிமித்தமாக சமீபத்தில் சென்னை விஜயம். அதிகாலை சென்ட்ரலில் இருந்து பெசன்ட் நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ‘துவல் நிலையம்’ என்று ஒரு பெயர்ப் பலகையில் பார்வை நிலைகுத்தியது. பேருந்து ஓட்டத்தில் பார்வையில் இருந்து மறையப் பார்த்த அந்த பெயர்ப் பலகையை மீண்டும் திரும்பிப் பார்த்த போது ‘துவல் நிலையம்’ என்ற அந்த வார்த்தைக்குக் கீழ் ‘PEN CENTER’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த தமிழ் வார்த்தை நினைவில் பதிந்துவிட அன்றைய தினம் பேருந்தில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் பெயர்ப் பலகைகளை கவனிக்க ஆரம்பித்ததில் ‘வாடகை ஊர்தியகம்’, ‘காலை உணவகம்’, ‘அலுவலர்கள் வெளுப்பகம்’, ‘இரும்பகம்’, ‘குளிர்பானம் மற்றும் செய்தித்தாள் விற்பனையகம்’ எனத் தமிழில் எழுதப்பட்டிருந்த பல்வேறு பெயர்ப் பலகைகளை காண முடிந்தது.

எங்கள் ஊரைப் போன்ற சிறிய நகரங்களில் கூட தமிழில் பெயர்ப் பலகைகளை காண்பது அரிதாக உள்ள நிலையில் தலைநகராம் சென்னையில் அதிக அளவில்-சுமார் 90 சதவீதம் பெயர்ப் பலகைகளை தமிழில் பார்த்தது சற்றே வியப்புதான்!.

இனியும் ‘சென்னைத் தமிழ்’ என கேலி பேசும் நண்பர்கள் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம்!

Saturday, June 11, 2011

இறப்பதற்கு 1000 வழிகள்!

சமீப காலமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன. தமிழ் தொலைக்காட்சிகள் (வித்தியாசம் என்ற பெயரில்) என்னென்னவோ நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதற்கு சத்யராஜ், பிரகாஷ்ராஜ் எல்லாம் வந்துவிட்டார்கள் (அவர்கள் கூறும் வித்தியாசங்களில் இதுவும் ஒன்று!). இந்த நிகழ்ச்சிகளில் 99.9 சதவீதம் வெளிநாட்டுச் சேனல்களில் இருந்து சுடப்பட்டவை என்பது வேறுகதை!

என்னதான் ‘சுட்டுப்’ போட்டாலும் அவர்களின் நேர்த்தியோ நம்பகத்தன்மையோ நம் தயாரிப்புகளில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம். சரி, விஷயத்திற்கு வருவோம்! கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளை FOX CRIME எனும் சேனல் ஒளிபரப்பி வருகிறது. இதில் சமீபமாக இரவு 10 மணிக்கு 1000 WAYS TO DIE எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதில் மனிதனுக்கு எப்படியெல்லாம் மரணம் சம்பவிக்கிறது என்பதை காட்டுகிறார்கள். உதரணத்திற்கு சில...

ஒரு பார்சல் குடோனை கடந்து செல்லும் இளைஞன் ஒருவன் திறந்து கிடக்கும் காம்பவுண்ட் கேட்டை பார்க்கிறான். காம்பவுண்டிற்குள் சற்று தள்ளி எல்.சி.டி. டி.வி-க்கள் கொண்ட அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கே ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால் மெதுவாக உள்ளே நுழையும் அவன் ஒரு எல்.சி.டி. டி.வி பெட்டியை எடுக்கிறான். அப்போது திடீரென அங்கு வரும் காவலாளி அவனைப் பார்த்து சத்தம் போடுகிறான். உடனே எங்கிருந்தோ மற்றொரு காவலாளியும் வந்து விடுகிறான். யாருமே இல்லையென நினைத்த இடத்தில் திடீரென இரண்டு பேர் உதயமானதைக் கண்டு திகைக்கும் அந்த இளைஞன் எக்காரணம் கொண்டும் அவர்கள் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்ற வெறியில் அந்த வளாகத்திற்குள்ளேயே தலைதெறிக்க ஓடுகிறான். அதன் மற்றொரு பகுதிக்கு வந்த அவன் காவலாளிகளின் பார்வையில் படாமல் இருக்க அங்கிருக்கும் குப்பை தொட்டிக்குள் ஏறி ஒளிந்து கொள்கிறான். சில நிமிடங்கள் காத்திருக்கும் நேரத்தில் குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரி வந்து தனது இரும்புக் கரங்களால் அந்தக் குப்பைத் தொட்டியை தூக்கி தனது முதுகில் உள்ள தொட்டியில் கொட்டிக் கொள்கிறது. இயந்திரத்தின் சத்தத்தில் அவன் அலறல் யாருக்கும் கேட்பதில்லை. உள்ளே குப்பைகளுடன் குப்பையாக விழுந்த அவன் சுதாரிப்பதற்குள் குப்பைகளை அழுத்தி சக்கையாக்கும் அடுத்த இயந்திரம் இயங்க ஆரம்பித்து விடுகிறது. அது அவனை அப்படியே நசுக்க ஆரம்பிக்கிறது.

இப்போது அந்த நிகழ்வை அப்படியே முப்பரிமாண நிலையில் காண்பிக்கிறார்கள். அது சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட் ஒருவரும் திரையில் தோன்றி முதலில் உடம்பில் எந்த பாகம் உடையும் அதன் பிறகு என்னென்ன நடக்கும் என்பதை விவரிக்கிறார். பின் நிஜமாகவே அந்த இயந்திரத்திற்குள் மாட்டியவன் நசுக்கப்படுவதைக் காண்பிக்கிறார்கள்.

இதில் மிகவும் சுவாரசியம் என்னவென்றால், இதுபோல் ஒரு நிகழ்வு ஏற்படும்போது நிச்சயமாக அதைப் படமாக்க முடியாது என்பதுதான். ஏனென்றால் அவை எல்லாமே திடீரென எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளாகவே இருப்பதும், அவை படமாக்கப்பட்டிருக்கும் விதம் உங்களுக்கு எவ்விதக் கேள்விகளை எழுப்பாது என்பதும்தான் இதில் சுவாரசியத்திலும் சுவாரசியம்!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

Friday, June 10, 2011

மீண்டும் வணக்கம்!

நான் முன்பே குறிப்பிட்டது போல் சோம்பல் மற்றும் பல்வேறு வேலைப்பளு காரணமாக எதுவும் எழுதவில்லை. தற்போது கூட எழுத வந்திருப்பது ஒரு மன அழுத்தம் காரணமாகத் தான். மன அழுத்தம் என்றால் வேறு ஏதோ பிரச்னை என நினைத்து விட வேண்டாம். நாம் அனுபவிக்கும் சில விஷயங்கள் எவ்வளவு தான் நாம் முயன்றாலும் நம் மனதை விட்டு நீங்கதவைகளாகிவிடும். அது போல் தான் அடுத்து நான் எழுதப் போகும் விஷயங்களும். இந்தப் பீடிகையை கண்டு ஏதோ இது உலகை மாற்றவல்ல உன்னதம் என நினைத்து விடாதீர்கள். வழக்கம் போல் மிகச் சாதாரணமானது தான். இந்த நீட்டி-முழக்கலுக்கு காரணம் நீண்ட நாட்களுக்குப் பின் எழுத வந்திருப்பது மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. இனி இடுகை...

Saturday, September 25, 2010

ஓர் அறிவிப்பு!

பதியம் இலக்கிய அமைப்பு
மகேஸ்வரி புத்தக நிலையம் நடத்தும்
இலக்கிக்கூடல்

26.09.2010 ஞாயிறுமாலை 5 மணிக்கு.
கே.ஆர்.சி.சிட்டி சென்டர் வளாகம்,
மங்கலம் பாதை, திருப்பூர்.

தலைமை
பாரதிவாசன்,

வரவேற்புரை
மகாதேவன்.

O ஆல்பெர் காம்யுவின்
"மரணதண்டனை என்றொரு குற்றம் " நூல் குறித்த விமர்சனம்.
( மருத்துவர்.நா.சண்முகநாதன், வழக்கறிஞர் மாதவி )

O கூத்துப்பட்டறை தம்பிச்சோழனின் நிகழ்த்துக்கவிதை,

O த.மு.எ.க.ச பொதுச்செயலாளர்
ச.தமிழ்ச்செல்வனின் இலக்கிய உரைவீச்சு.

Friday, March 19, 2010

பிடி கத்தரிக்காய்!

தற்போது நாட்டில் பெட்ரோல்-டீசல் விலைஉயர்வு, நித்யானந்தா, கல்கி பகவான், மகளிர் மசோதா, பென்னாகரம் இடைத் தேர்தல் என்ற பரபரப்புகளுக்கிடையில் "பி. டி. கத்தரிக்காய்" சற்று பின் தங்கி விட்டது. இந்த நேரத்தில் அதைப் பற்றி பேசுவது சற்று பொருத்தமற்று தோன்றினாலும் பேச வேண்டியது அவசியமாகும். மாண்சான்டோவின் இந்திய விற்பனைப் பிரதிநிதி(!) ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்தரி குறித்து கருத்துக் கேட்க மேற்கு வங்கம், கர்நாடகம் என சென்ற இரண்டு மாநிலங்களிலும் ”அமோக வரவேற்பு” பெற்ற காரணத்தால் தற்காலிகமாக பி.டி. கத்தரிக்கு தடை என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அடுத்த நான்கைந்து நாட்களில் மீண்டும் ஒரு கூட்டத்தில் பேசிய ஜெய்ராம், “பி.டி.கத்தரிக்காயை” கொண்டுவர முதலமைச்சர்கள், வேளாண்துறை விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒத்துழைக்க வேண்டும் என மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு நூல் விட்டுப்பார்த்தார். (பாவம்! அவருந்தான் எத்தன பேர சமாளிப்பாரு!).

இந்நிலையில், “உயிரித் தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம்” என்ற பெயரில் மரபணு மாற்று தொழில்நுட்பம் குறித்து மாற்றுக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்க ஒரு புதிய வரைவு மசோதாவை தயாரித்து அதை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் அதன் பாதிப்பை ஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கவில்லை என்றால் ஒரு வருடம் சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம். மேலும் அமெரிக்க விவசாய நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் தலையிடுவதற்கும் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் அவர்கள் நேரடியாக விவசாயம் செய்வதற்குமான வழியாக “விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு” (யாரோட உணவுக்கு பாதுகாப்புன்னு தெரியல!?) என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (அதாவது ஏற்கனவே ”சிறப்பு பொருளாதார மண்டலம்” அப்டீன்ற பேர்ல வெளிநாட்டு நாட்டு கம்பெனிகாரன் வளச்சுபோட்டது போக, மிச்சம் மீதி இருக்கிற கொஞ்ச நஞ்ச விவசாய நெலத்தையும் “ஒப்பந்த விவசாயம்” -ங்கிற பேர்ல அமெரிக்காகாரங்கையில கொடுத்து புட்டு உள்ளூர் விவசாயிய மொத்தமா ஓட்டாண்டியாக்குறதுக்கான ஏற்பாடு!)

இப்படியாக மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவிற்குள் கொண்டுவர அனைத்து வழிமுறைகளையும் கையாள மத்திய அரசு தயாராகி வரும் நிலையில் மரபணு மாற்ற கத்தரி குறித்து வெளிப்படையாக யாரும் கூறாத புதிய தகவல்களை விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதன்மை அறிவியல் அலுவலர் டி.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூத்த உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரு கூட்டத்தில் தெரிவித்தை இங்கு குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். அவர்கள், “அறிவியல் ரீதியாக மரபணு மாற்ற தொழில்நுட்பம் என்பது உயிர் தொழில்நுட்பத்தில் ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மரபணு மாற்றக் கத்தரிக்காய் உண்பதால் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கருத்துக்களுக்கு இதுவரை எவ்வித ஆதாரங்களும்
இல்லை. அதேசமயம் மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடும் விவசாய நிலங்களுக்கு
அருகில் உள்ள, அதை பயிரிடாத மற்ற விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பது நூறு சதவீதம் உண்மையாகும்.

அது எப்படியெனில் அமெரிக்கா போன்ற நாடுகளி நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என மிகப் பெரிய அளவிலான பண்ணை நிலங்களில் ஒரே மாதிரியான விவசாயப் பொருட்களை மிகப்பெரிய அளவில் (Maas Productioon) உற்பத்தி செய்யும் விவசாய முறை பின்பற்றப்பட்டு வருவதால் அங்கெல்லாம் பி.டி. ரக விவசாய பொருட்கள் பயிரிடுவது ஏதுவாக உள்ளது. ஆனால் சிறு-குறு விவசாயிகளையே அதிகம் கொண்டுள்ள நமது நாட்டில் சிறு விவசாயி ஒருவர் தனது சிறிய அளவிலான நிலத்தில் பி.டி. ரகத்தைப் பயிர் செய்தால் அருகில் உள்ள விவசாயியும் அதே ரகத்தை பயிர் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவார். (அதாவது ஒரு ஏக்கர் அளவில் பி.டி. ரகம் பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தைச் சுற்றிலும் சுமார் முப்பது அடிக்கு வேறெந்த ரகப் பயிர்களையும் பயிரிட முடியாது.) இது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் பொருளாதார ரீதியாக பார்க்கும் போது அவ்வாறு பயிர் செய்ய, விவசாயிகள் பெருமளவில் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இது விவசாயிகளையும் நாட்டையும் பெரும்பாதிப்பிற்குள்ளாக்கும். மேலும் மரபணு மாற்ற ரகங்களைப் பயிரிடுவதன் மூலம் உள்நாட்டு விதை உற்பத்தி பாதிக்கப்பட்டு-நாளடைவில் அழிக்கப்பட்டு, பின் வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாண்சாண்டோவிற்கு வழங்கும் சூழல் உருவாகும். இப்போதே கடந்த 2006-07-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 1200 கோடி ரூபாய் வரை அந்நிய விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு ராயல்டியாக வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நம் நாட்டிற்கு அவசியமில்லாத ஒரு செயலாகும். எனவே பெருமளவில் சிறு-குறு விவசயிகளைக் கொண்ட நம் நாட்டிற்கு பி.டி. கத்தரிக்காய் ஏற்புடையதாக இருக்காது.” எனக் கூறுகின்றனர்.

பி.டி. கத்தரிக்குப் பின்னால் இவ்வாறான உள்விவகாரங்கள் இருக்க அதைப்பற்றிப் பேசினாலே கழுத்தை நெரிக்க தயாராகிவரும் மத்திய அரசு ‘பிடி கத்தரிக்காய்!’ என பி.டி. கத்தரிக்காயை அனைவரின் வாயிலும் திணிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிலையில் நுகர்வோர்களாகிய நம் நிலை என்ன? என்பதுதான் மக்களாகிய நம் அனைவரின் முன்பாகவும் உள்ள மிகப் பெரிய கேள்விக்குறியாகும்!

Saturday, February 13, 2010

வேறென்ன செய்ய?!

சமீபத்தில் ஒரு திங்கட்கிழமை நாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் செய்திக்காக சக செய்தியாளர்களுடன் மரத்தடியில் காத்துக் கிடந்த போது திடீரென உறவினர் ஒருவர், "மாப்ள!" என்றழைத்த படியே என் முன்னால் தோன்றினார். மீண்டும் அவரே, "கலெக்டர பாத்து ஒரு மனு குடுக்கலாம்னு வந்தங்க" என்றார். "ஏங்க என்ன பிரச்னை?" என்றேன். "இந்தக் கல்விக் கடனுக்குத் தான் நடையா நடக்கறேன், ஒன்னும் வேலையாவ மாட்டங்குதுங்க மாப்ள" என்றார் சலிப்புடன். "சரி போய் மனு குடுத்துட்டு வாங்க, இங்கயேதான் இருப்பேன்" எனக் கூறி அனுப்பி வைத்தேன். திரும்பி வந்தவர், " இது நாலாவது மனுவுங்க மாப்ள!" எனக் கூறிய படியே விரிவாக புலம்ப ஆரம்பித்தார். அதன் சாராம்சம் இதுதான், ஒரு ஏக்கர் விவசாய பூமியைச் செந்தமாக கொண்ட ஏழை விவசாயியான அவருக்கு தன் மகனை பொறியியல் கல்வி படிக்க வைக்க ஆசை (யாரை விட்டது…?!). கல்லூரியில் இடம் கிடைத்து, சேர்த்தும் விட்டார். 'அரசு கோடிக்கணக்கில் (!) கல்விக் கடன் வழங்குவதாக அறிவிக்கிறதே நம்ம பையனுக்கும் வாங்கி படிக்க வெச்சுருவோம்' என்று மனு செய்திருக்கிறார். மாவட்ட முன்னோடி வங்கியில் இருந்து கடிதமும் வந்தது. அதை எடுத்துக் கொண்டு ஆவலுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளருக்கு வணக்கம் போட்டு கடிதத்தை காண்பித்திருக்கிறார். அவரோ அதே மாதிரி கடிதம் அவருக்கு முன்பாக தனக்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்தி விட்டு, 'நீங்க போய்ட்டு அடுத்த வாரம் வாங்க' எனக் கூறி வந்த வழியே திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் சென்று கேட்டவருக்கு 'அடுத்த வருஷம் வாங்கிக்குங்களேன்' என சமாதானம் கூறி அனுப்பி விட்டார் வங்கி மேலாளர். உடனே மீண்டும் ஒரு மனு தயாரித்து ஒரு திங்கட்கிழமை நாள் கூட்டத்தில் தனது குறையை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு வைத்துள்ளார். மீண்டும் முன்னோடி வங்கியில் இருந்து வந்த பரிந்துரைக் கடிதத்துடன் வங்கி மேலாளரை பார்க்கச் சென்றவரை, 'கலெக்டர்கிட்ட போய் சொன்னா மட்டும் குடுத்துடுவமா?' என வங்கி மேலாளர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட இவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது. 'நீயா? நானான்னு ? பாக்காம விடமாட்டேன்னு' இவர் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு மனு என இறங்க தற்போது நான்காவது முறையாக மனுவுடன் வந்திருக்கிறார். ஆட்சியரின் பரிந்துரை மீது வங்கி மேலாளரின் பார்வை என்ன என்பதை குறிப்பிட்டு மனு வழங்கியும் வழக்கம் போல் மனுவை வாங்கி மாவட்ட முன்னோடி வங்கிக்கு பரிந்துரைத்து விட்டு அவர்கள் பணியை முடித்துக் கொண்டது மாவட்ட நிர்வாகம். ஆனால் ஊராட்சி அளவில் முகாம்கள் நடத்தி கல்விக் கடன் வழங்குவதாக நாளொரு மேனியும் வெளிவரும் செய்திகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. மத்திய நிதியமைச்சர் முதற்கொண்டு, 'எவ்வித பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும்' என சற்று ஆவேசமாகவே அறிக்கையெல்லாம் விட்டார். ஆனால் உள்ளூர் வங்கி மேலாளர்களிடம் யாருடையா பாச்சாவும் பலிக்கவில்லை!

இந்த மனுவும் எதுவும் செய்யாது என்பதை உணர்ந்திருந்த உறவினர், " இப்பிடியே, யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறானே அந்த மேனேஜர், அவனா என்னாதான் பண்றது மாப்ள?" என்றார். சுற்றியிருந்த சக செய்தியாளர்களுடன் நானும் சேர்ந்து மையமாக சிரித்து வைத்தேன். பின் சில ஜனநாயக ரீதியிலான போராட்ட வழிமுறைகளைக் கூறினேன். அதற்கு அவர் தயாராயில்லை. ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் " அவன ஒன்னுமே பண்ணமுடியாதா மாப்ள?, அவன எதாச்சும் பண்ணனும் மாப்ள!" என்றவரை தனியாக அழைத்துச் சென்று, "அவரு வேல முடிஞ்சு வரும் போது ஆள் வெச்சு அடிச்சு, மண்டைய ஒடைச்சிடுங்க!" என்றேன்.

Monday, January 11, 2010

கொம்பு சீவுதல்!

ஒவ்வொரு வாரமும் குமுதம் வாரஇதழில் "நான் தமிழன்" என்று ஒரு பகுதி வெளிவந்து கொண்டிருக்கிறது.(பெரும்பாலும் படித்துத்திருப்பீர்கள்) இப்பகுதி ஆரம்பித்த உடனேயே 'இப்ப இது தேவையா?' என்ற கேள்வி எழுந்தாலும் ஏதோ 'பழமை, பெருமை, பாரம்பரியம்' பற்றி பேசுகிறார்கள், ஒரு எளிய பதிவாக இருக்கும், என சமாதானம் கூறி மன விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை. கடந்த 6-1-2010 தேதியிட்ட இதழில் 'வணிக வைசியர்' குறித்து எழுதியிருந்தார்கள். அதில், 'விஜயநகர ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தால் இவர்கள் இடம்பெயரும்போது ஒரு குறிப்பிட்ட இடங்களில் குடியேறாமல், தமிழகம் முழுவதும் பரவலாக குடியேறியுள்ளனர். அதனால் அனைத்து மாவட்டங்களிலும் இச்சமூகத்தாரை காணமுடிகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால் தான் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இவர்கள் மிகப்பெரிய அமைப்பாக, அரசியல் சக்தியாக மிளர முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுக்கும் மேல நான் என்னத்த எழுதறது? வேணும்னா கோவப்படாம தலைப்ப மட்டும் மறுபடியும் ஒருதடவ படிச்சுக்குங்க!

Thursday, December 24, 2009

எண்டர்டெய்ன்மெண்ட்!

இதைப் படிக்கு நண்பர்கள் நிச்சயம் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் ஒன்றிற்கு உரிமையாளராயிருப்பீர்கள். நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிச்சயம் இதை அனுபவித்து இருப்பீர்கள். இல்லையெனில் அடுத்தமுறை பயணிக்கும் போது நிச்சயம் கவனித்துப் பாருங்கள். அதாவது நீங்கள் உங்களது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது உங்கள் பின்னால் வரும் வாகனம் ஒன்றிலிருந்து இடைவிடாது ஹாரன் ஒலித்துக் கொண்டேவரும். இதில் சில கிக்கிகிக்கீ……கிக்கீ……கிக்கிகிக்கீ……. என ரிதமிக்காகவும் கேட்கும். உடனடியாக நீங்கள்,'ஏதோ நாம் நடு ரோட்டிற்கு சென்று விட்டோமோ?' என சந்தேகித்து சட்டென்று உங்கள் வாகனத்தை ஒதுக்கி வழிவிட்டாலும் மீண்டும் உங்கள்----க்குப் பின்னால் அதேபோல் ஹாரன் அடிக்கும். அது நீங்கள் பசியில் இருக்கும் நேரமாக இருந்து, நீங்கள் உடனடியாக உங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைந்து, சாலையின் விளிம்பிற்கு அதை ஒதுக்கி, லேசாக குனிந்து ரியர்வியூ மிரரில் ஒரு முறைப்பு முறைத்தீர்களானால் அப்போதைக்கு ஹாரன் அடிப்பது நிற்கும். அதற்கு பின்னும் உங்கள் பின்னால் வருவது நல்லதல்ல என்பதை உணர்ந்து, உங்களை முந்திச் சென்ற பின் அவருக்கு முன்பாகவும் வேறு வாகனங்களே இல்லையென்ற போதும் மீண்டும் ரிதமிக்காக ஹாரன் அடித்துக் கொண்டே ஒன்றுமே தெரியாதவர் போல் செல்வார்கள். அப்போது செம்மறி ஆடு உங்கள் ஞாபகத்திற்கு வந்தால் உண்மையிலேயே உங்களுக்கு 'ஐக்யூ' அதிகம் என்பதற்கு வேறெந்த நிரூபணமும் தேவையில்லை!.

நீங்கள் இதுவரை இப்படி ஒரு அனுபவம் வாய்க்கப்பெறாதவராயிருந்தால் அடுத்த பயணத்தின் போது கூர்ந்து கவனித்துப் பாருங்கள், அது பயணத்தின் போது உங்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெய்ன்மெண்ட்டாகவும் இருக்கும்!

Wednesday, December 23, 2009

உயர்ந்த லட்சியம்!

சென்ற வாரம் 'கண்களுக்கு குளிர்ச்சியான' ஒரு வீக் என்டு வேளையில் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு அரசு பேருந்து ஒன்றில் ஏறினேன். பேருந்தில் நான்தான் முதல் ஆள். பின் சில நிமிடங்களில் ஒரு பெண்மணியும் கல்லூரியில் படிக்கும் அவரது மகளும் பேருந்தில் ஏறினர். ஏறும் போதே அப்பெண்மணி தனது மகளிடம்,'வேற பிரைவேட் பஸ் எதுவுமில்லையா?' எனக் கேட்டுக் கொண்டே ஏறினார். அதற்கு அவரது மகள்,'இல்லை. அதுவுமில்லாம அவன் வேகமாப் போவான்' என பதிலுரைத்தார். ஆனாலும் தன் மகள் கூறிய அப்பதிலில் திருப்தியடையாத அந்த தாய் முன் இருக்கையில் பெட்டி படுக்கைகளுடன் அமர்ந்த பின்னும் பேருந்தை விட்டு கீழிறங்கி 'வேற பிரைவேட் பஸ் ஏதாவது கண்ணில் படுகிறதா?' என ஒரு சுற்று பார்த்து விட்டு தான் மீண்டும் பேருந்தில் வந்தமர்ந்தார்.

இந்த ஒரு சின்ன விஷயத்தில் கூட அரசை ஆதரிக்க தயாராயில்லாத இவர்களைப் போன்றோருக்கு 'புள்ள படிப்ப முடிச்சதும் காசு கொடுத்தாவது கவர்மெண்டு வேலை வாங்கிடனும்!' என்ற 'உயர்ந்த லட்சியம்' மட்டும் உண்டு.